வன்னியில் தொடரும் கொடிய யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதானப் பேச்சுகள் வேண்டும்

வன்னியில் தொடரும் கொடிய யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் சமாதானமாக வாழ்வதற்கான பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்படவேண்டுமென பிரித்தானிய மற்றும் நோர்வே தூதுவர்கள் அடங்கிய தூதுக்குழுவுக்கு யாழ். மாவட்ட ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம் எடுத்துரைத்துள்ளார். யாழ்.மாவட்ட நிலைமை குறித்து ஆராய்வதற்கான இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் பீற்றர் ஹேஷ் நோர்வே தூதுவர் டோஹட்ரம் ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழு யாழ்.ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்த போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆயர் மேலும் தெரிவிக்கையில்; மக்கள் இங்கே பலவிதமான கஷ்டங்களையும் கட்டுப்பாடுகளையும் அனுபவிக்கின்றனர் என்பதை விபரமாக எடுத்துக் கூறினேன். அத்துடன் வன்னி மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு எவருமே இல்லை. அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி வவுனியாவுக்கு வந்துள்ளமை எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு ஆதரவாக எவருமேயில்லாததை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். எனவே அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து மீண்டும் அங்கு பணிசெய்யவேண்டுமென அவர்களை இச்சந்திப்பின் போது வலியுறுத்தினோம். வன்னியில் கொடிய யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும். மக்கள் சமாதானமாக வாழ்வதற்கு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவேண்டும். இதன் மூலமே மக்களுக்கு மன நிம்மதி ஏற்படும். சமாதானத்துக்கான செயற்பாடுகள் ஒன்றும் அரசினால் முன்வைக்கப்படாமல் யுத்தம் முன்னெடுக்கப்படுவதையிட்டு எமக்கு மனவருத்தமாகவுள்ளது. இது தொடர்பாக உலகநாடுகள் வாய்பேசாமல் மௌனமாகவுள்ளன. இதற்காக உலக நாடுகள் குரல் கொடுக்க முன்வர வேண்டுமெனவும் தெரிவித்ததாகவும் கூறினார்.

பொலிஸ் பதிவுக்கு அடுத்த இலக்கு மலையக மக்களே என்கிறார் இமாம்

மேல் மாகாணத்தில் வதியும் வடக்கு, கிழக்கு தமிழர்கள் பொலிஸில் பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், அடுத்ததாக மலையக மக்களை பொலிஸார் இலக்கு வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இமாம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பொலிஸ் பதிவு மற்றும் சோதனை, தேடுதல் நடவடிக்கைகளினால் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் துன்பமடைகின்றனர். மேல் மாகாணத்தில் தங்கியுள்ள வடக்கு, கிழக்குத் தமிழர்கள் பொலிஸில் பதவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், அடுத்ததாக மேல் மாகாணத்தில் தங்கியுள்ள மலையக மக்களை பொலிஸார் பதிவுகளுக்குட்படுத்தவுள்ளனர். பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கைகளினால் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். தமிழ், முஸ்லிம் மக்களை மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
(Read more . .)

கடற்புலிகளின் இரண்டாவது தளபதி செழியன் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு

கடற்புலிகளின் இரண்டாவது தளபதி செழியன் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு- கடற்புலிகளின் இரண்டாவது தளபதியான செழியன் என்பவரும் மேலும் இரண்டு புலிகள் இயக்க அங்கத்தவர்களும் வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுவெடிப்பில் சிக்கி பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி பூநகரி வலைப்பாடு பிரதேசத்தில் இவர்கள் வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த போது மேற்படி கிளைமோர் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. கடற்புலிகளின் தளபதியான சூசை படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல் சமபவமொன்றில் காயமடைந்துள்ளதன் காரணத்தினால் முக்கியமான பொறுப்புக்கள் யாவும் தற்போது செழியனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

13 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு சந்தேக நபரை கைது செய்யுமாறு உத்தரவு

வாகரை ஓமடியாமடுவில் வசிக்கும் 13 வயது நிரம்பிய தர்மலிங்கம் தர்ஷினி என்ற சிறுமியை அவரது தந்தையான கந்தையா தர்மலிங்கம் என்பவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளது சம்பந்தமாக கடந்த புதன்கிழமை வாகரைப் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது தாயாரான பி.ராணியிடம் ஒப்படைக்குமாறும் மட்டக்களப்பிலுள்ள சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தருக்கு அறிவித்து அவரிடமிருந்து அறிக்கை பெற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் சந்தேக நபரான தந்தையை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இத்தகைய குற்றங்கள் பாரதூரமானவை எனக் குறிப்பிட்ட நீதிபதி பொலிஸாரும், சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர்களும் இத்தகைய குற்றச் செயல்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தி இத்தகைய குற்றச் செயல்களை புரிவோரை உடனடியாக கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதையும் நீதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

கம்பஹாவில் தேடுதல் 8 சிங்களவர்கள் கைது

கம்பஹாவில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எட்டு சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். புதன்கிழமை மாலை 6 மணி முதல் நேற்று வியாழக்கிழமை காலை 6 மணிவரையும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 14 ஆயிரம் பேர் இந்தத் தேடுதலின் போது விசாரணை செய்யப்பட்டதுடன், அவர்களின் அடையாள அட்டைகளும் பரிசீலிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 924 வாகனங்கள் சோதனையிடப்பட்டதுடன், சில சாரதிகள் போக்குவரத்து விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தேசிய பிரச்சனைக்கு தீர்வுகாண புலம்பெயர் இலங்கையரின் ஒத்துழைப்பு அவசியம் -வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன

தீர்மான மிக்கதோர் கட்டத்தை எட்டியிருக்கும் இலங்கையின் தேசிய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வொன்றை எட்டுவதே முதன்மையாக கருதப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன தெரிவித்துள்ளார். படையினர் வெற்றிகரமாக முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படையினர் வெற்றிகரமாக முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவதில் அரசாங்கம் அதிகம் கரிசனை காட்டிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைகளின் ஊடாக அதிகார பரவலாக்கல் மேற்கொள்ளப்பட்டு அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் சமாதான திட்டத்திற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 15,788 குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபை கடன் உதவி

கடந்த 29 வருடத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை வவுனியா மாவட்டத்தில் 15 ஆயிரத்து 788 குடும்பங்களிற்கு கடனாகவும் மானியமாகவும் கூரைக்குரிய ஓடுகள், தகரங்கள் போன்ற உதவிகளை வழங்கியுள்ளது. அந்த எண்ணிக்கையானது மாவட்ட மொத்த குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்காக காணப்படுகின்றது. 1979 ஆம் ஆண்டு முதல் வீடமைப்பு அதிகார சபை வவுனியாவில் இயங்கிவருகின்றது என மாவட்ட முகாமையாளர் வல்லிபுரம் கணேசநாதன் தெரிவித்தார். உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு பிரதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். தமது செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது; நடுத்தர வருமானமுடையவர்களுக்கு கடனாகவும் வறுமையிலும் வறுமைப்பட்ட மக்களுக்கு மானியமாகவும் என வருமானம் குறைந்தோருக்கு கடனும் மானியமும் வீடுகள் அமைத்துக்கொள்ள உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன், உள்ளூரில் ஏற்பட்ட இடம்பெயர்வினால் நலன்புரி நிலையங்களில் வசித்த ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து மாதாந்தம் இருநூறு ரூபா வீதம் 40 வருடத்திற்குள் திருப்பிச் செலுத்தும் வாடகை ஒப்பந்த அடிப்படையில் வீடுகள் அமைத்து வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஓரளவு வசதி படைத்தோரில் சிலர் வீட்டுப்பெறுமதியை முற்றாக செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. (Read more . .)

குண்டுவெடிப்பில் உயிரிழந்த முன்னாள் வன்னி எம்.பி.யின் இறுதிக் கிரியைகளில் பெருமளவானோர் பங்கேற்பு

அநுராதபுரம் குண்டு வெடிப்பில் அகால மரணமான முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் இறுதிக் கிரியைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட மூவினத்தையும் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். அநுராதபுரத்தில் கடந்த திங்கட்கிழமை காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மரணமான ஐக்கிய தேசியக் கட்சி வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தகுமார புஞ்சிகேவாவின் இறுதிக் கிரியைகள் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஈரப்பெரியகுளம் பொது மயானத்தில் நடைபெற்றது. ஈரப்பெரியகுளம் மகாவித்தியாலய மைதானத்தில் சமய கிரியைகளும் இரங்கல் உரைகளும் இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள் தொடர்பான விடயங்களை கவனிக்க பிரதேச அமைப்புகள் உள்ளடக்கிய ஏற்பாட்டுக்குழு ஒன்றும் நியமிக்கப் பட்டிருந்தது. மதத் தலைவர்கள், பொது அமைப்புகளுடைய பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் உரையாற்றினார்கள். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் கிராமசேவையாளராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர். கடைசி வரை மக்களுக்காக சேவையாற்றினார். பாராளுமன்றத்தில் இருந்த வேளையில் வவுனியாவிலுள்ள மூவின மக்களுடைய தேவைகளையும் சுட்டிக்காட்டி வந்தவர்.

காத்தான்குடியில் 2 இளைஞர்களின் சடலங்கள் கரையொதுங்கின

மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையில் புதன்கிழமை இரவு இரு இளைஞர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்டும் மரமொன்றுடன் இணைத்துக் கட்டப்பட்ட நிலையிலும் இவ்விரு சடலங்களும் இரவு 9.30 மணியளவில் கரையொதுங்கியுள்ளன. இவ்விரு சடலங்களையும் அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த பொலிஸார் அடையாளம் காணமுடியாதளவுக்கு உருக்குலைந்த நிலையிலிருந்த இரு சடலங்களையும் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். மட்டக்களப்பில் தினமும் ஆட்கடத்தல்கள் இடம்பெற்று வரும் நிலையில் படுகொலை செய்யப்பட்டு கடலில் போடப்பட்டிருக்கும் சடலங்கள் யாருடையதென்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை பலப்படுத்த கருணாஅம்மானை நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன்! - டக்ளஸ் தேவானந்தா பா.உ செயலாளர் நாயகம் - ஈ.பி.டி.பி

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் (கருணாஅம்மான்) விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் பாராளுமன்றத்திற்கான வருகை ஐனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதற்கான ஒர் அரிய சந்தர்ப்பமாகும்.! எனவே அவரது வருகையை நான் நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றேன். பாராளுமன்றம் சந்தர்ப்பவாதிகளின் இடமல்ல! அது சந்தர்ப்பவாதிகளுக்கு இடம் கொடுக்கும் களமாகிவிடக்கூடாது என்பதே எமது விருப்பம். தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் அகிம்சையில் தொடங்கிய போது பாராளுமன்றமும் அதற்கு ஒரு களமாக திகழ்ந்திருந்தது. ஆனாலும் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியானது பாராளுமன்றத்தின் ஊடாக எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது எனக் கருதி அந்தப் பாதையை முழுமையாக நிராகரித்திருந்தது. முடிவற்று தொடரும் அழிவு யுத்தமும், தமிழர்களை தமிழர்களே கொன்றொழிக்கும் சகோதரப்படுகொலைகளும், இவைகளால் விளையும் அவலங்களும், எமது ஆயுதப்போராட்டம் பெற்றுத்தந்த இலங்கை இந்திய ஒப்பந்தமும் தமிழ் பேசும் மக்களை மறுபடியும் பாராளுமன்றத்தை நோக்கியே அழைத்து வந்திருக்கின்றது. எமது மக்களுக்கான ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட சூழலில், எமது மக்களின் வாக்குப்போடும் சுதந்திரம் கூட பலாத்காரமாக பறிக்கப்பட்ட ஒரு சூழலில், தவறான முறையில் பாராளுமன்றம் வந்தவர்கள் பலரும் தங்களது பாராளுமன்ற பதவிகளை வெறும் சுயலாப அரசியலுக்காகவே இன்று வரை பயன்படுத்தி வருகிறார்கள். வெறும் பரபரப்பு காட்டுவதற்காகவும், பத்திரிகைச் செய்திகளுக்காகவும் பாராளுமன்றத்தில் வீராவேசமாக பேசுவதோடு மட்டும் அவர்கள் திருப்தியடைந்து விடுகிறார்கள். ஆனாலும் எமது மக்களின் நிம்மதியான வாழ்விற்காக, நிரந்தர அமைதிக்காக, அரசியலுரிமை சுதந்திரத்திற்காக தங்களது பாராளுமன்ற பதவிகளை அவர்கள் இதுவரை சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது உலகறிந்த உண்மையாகும்!
(Read more . .)

பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர் மட்டக்களப்பில் சுட்டுக் கொலை

மட்டக்களப்பு, கொக்குவில் பகுதியில் புதன்கிழமை இரவு பிள்ளையான் குழுவைச் (த.ம.வி.பு.) சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு 8 மணியளவில் இவர் கொக்குவில் முதலாம் குறுக்குத்தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இனந்தெரியாதோரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரி.எம்.வி.பி.யின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவரும் குறிஞ்சாமுனையைச் சேர்ந்தவருமான கதிர்காமப்போடி மேகநாதன் (37 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாவட்ட நீதிபதி ராமக்கமலன் மரண விசாரணைகளை மேற்கொண்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து கொக்குவில் பகுதியில் படையினரும் பொலிஸாரும் தேடுதல்களை நடத்தினர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் கடும் விமானத்தாக்குதல்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை விமானப்படை விமானங்கள் இரு இடங்களில் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன. புதுக்குடியிருப்பில் புலிகளின் இரு முகாம்கள் மீதே இரு குண்டு வீச்சு விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார். இவ்விரு முகாம்களிலும் பெருமளவு புலிகளிருந்ததாகவும் இதனால் விமானத் தாக்குதலில் அவர்களுக்கு பலத்த சேதமேற்பட்டிருக்கலாமெனவும் விமானப்படையினர் தெரிவித்தனர். இதேநேரம், புதன்கிழமை மாலை 5.40 மணியளவில் முல்லைத்தீவு குமுழமுனை மற்றும் நாயாறு வாவிக்கு மேற்கே மூன்று இடங்களில் எம்.ஐ24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் புலிகளுக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புலிகளுக்கு உதவிபுரிந்து கோடிக்கணக்கில் சம்பாதித்த சிங்கள வர்த்தகர்

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகச் செயற்பட்டு வந்த துவான் முத்தாலிப் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாகத் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது குறித்த கொலை நடவடிக்கையின் பின்னணியில் முக்கிய நபராக கோடீஸ்வரராகிய சிங்கள வர்த்தகர் ஒருவரே செயற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த வர்த்தகர் பாணந் துறையில் ஹிரண பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவ்வாறு மேற்படி கொலைக்கும் அவருக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பு விசாரணைகளின் போது தெரியவந்ததைத் தொடர்ந்து பொலிஸ் விசேட குழுவினர் கடந்த 4 ஆம் திகதி குறித்த ஹிரண பிரதேசத்திற்குச் சென்று மேற்படி கோடீஸ்வர வர்த்தகரைக் கைது செய்ததாக பாணந்துறைப் பொலிஸ் தலைமையத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்த வர்த்தகரைக் கைது செய்துள்ள விசேட பொலிஸ் குழுவினர் அவர் பயன்படுத்திவந்த ஆடம்பர பிராடோ ஜீப்வண்டியையும் சோதனை நடவடிக்கைகளுக்காகப் பொறுப்பெடுத்துள்ளனர். இந்த பிராடோ ஜீப் வண்டி ரூபா 90 இலட்சம் பெறுமதியானதெனவும் மற்றும் ஆடம்பர வசதிகளுடன் விசேட இயக்க வசதிகளும் கொண்டதெனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Read more . .)

கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு அடுத்த வாரம் 50 லொறி உணவுப் பொருள் அனுப்ப ஏற்பாடு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் 600 மெற்றிக்தொன் உலர் உணவுப் பொருட்களை 50 லொறிகளில் அடுத்த வாரம் அனுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மீள் குடியமர்த்தல் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம்.ராசிக் தெரிவித்தார். இரு மாவட்டங்களுக்கும் கடந்த 2 ஆம் திகதி 51 லொறிகளில் உலக உணவுத் திட்டத்தின் 650 மெற்றிக்தொன் உலர் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள அரச அதிபர் ஊடாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், இவ்வாண்டுக்கு தேவையான உணவுப் பொருட்களை அங்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல் அரச அதிபருக்கு வழங்கப்படவுள்ளது. இரு மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லும் மார்க்கம் குறித்து இறுதிநேரத்தில் முடிவெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். (Read more . .)

ஆயுததாரிகளால் இளைஞன் கடத்தல்

நவாலிப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. வட்டு.கிழக்கு துணவியைச் சேர்ந்த முருகேசு சந்திரகுமார் (வயது 31) என்பவரே கடத்திச் செல்லப்பட்டவராவார். வாகனத்திருத்தகம் மற்றும் தரகுப்பணிகளை மேற்கொண்டு வரும் இவர், செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் நவாலியிலுள்ள தனது வாகனம் திருத்தும் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்யவிருந்த காதலியை நண்பர்களுக்கு 4000 ரூபாவுக்கு விற்ற காதலன்

நீண்ட காலமாக காதலித்து வந்த காதலியை நண்பர்களுக்கு 4000 ரூபாவுக்கு விற்ற இளைஞனை தியாகொட பொலிஸார் தேடிவருகின்றனர். இவ்விளைஞன் காதலியின் பெற்றோரிடம் திருமணத்துக்கு சம்மதம் பெற்றுக்கொண்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்னர் இவர் யுவதியை பெற்றோரின் சம்மதத்ததுடன் தியாகொடப் பகுதிக்கு ஒரு நண்பரின் திருமண வைபவத்துக்கெனக் கூறி கூட்டி வந்துள்ளார். நண்பர் ஒருவரின் வீட்டிற்கு வந்த பின்னர் 4000 ரூபாவை நண்பரிடம் வாங்கிக்கொண்டு தன்னை அங்கே இருக்குமாறும் தான் வெளியே போய்விட்டு வருவதாகவும் கூறிச்சென்றதாகவும் அந்த யுவதி பொலிஸாரிடம் தெரிவித்தார். பல மணி நேரமாகியும் காதலன் வரவில்லை எனவும், அவரது நண்பர்கள் தன்னை பலாத்காரம் செய்தனர் எனவும், பின்னர் வாகனத்தில் வேறு இடத்துக்கு கொண்டு சென்றும் குற்றம் புரிந்ததாகவும் அந்த யுவதி கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிஸார் அந்த இளைஞர்களையும் யுவதியின் காதலனையும் தேடிவருகின்றனர். யுவதி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அந்த அறிக்கையை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளனர்.

திருகோணமலையில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை

திருகோணமலை அன்புவழிபுரம் பகுதியில் 42வயதான பொதுமகன் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதியான பாலையூற்றைச் சேர்ந்த கப்ரியல் வில்சன் என்பவரே கொல்லப் பட்டவராவார். இனந்தெரியாத சிலர் வில்சனின் வீட்டுக்கு சென்று அவரின் முச்சக்கர வண்டியை பாலையூற்று வைரவர் கோயிலுக்கு வாடகைக்கு எடுத்துச் சென்ற போதே இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது உப்புவெளி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜாஎல, றாகமவில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு

ஜாஎல மற்றும் றாகம பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் புதன்கிழமை இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சடலம் ஜாஎல, தடுகம குமபுக்கஹாவெல பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் சோபமாலி சுஜித் (32 வயது) என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த இளைஞர் 6 மாதங்களுக்கு முன்னர் சப்புகஸ்கந்த வீதியின் கோனவல பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும் இதன் பின்னர் வத்தளை ஒலியமுல்லவில் வசித்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இவர் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 8 வருடங்களாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, றாகம கல்வலவத்தை பகுதியில் 100 அடி ஆழமான தண்ணீர் நிரம்பிய குழியொன்றில் இருந்து மற்றைய இளைஞரின் சடலம் முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சடலத்தின் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மது ஒழிப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும்

மது ஒழிப்பு நடவடிக்கையை முறையாக நடைமுறைப்படுத்தவும் நாட்டிலிருந்து அதனை முற்றாக ஒழிக்கவும் பாராளுமன்றத்தின் சகல கட்சிகளினதும் இணக்கம் கிடைத்துள்ளதனால் மது ஒழிப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றம் புதன்கூடியது. வாய்மூல விடைக்கான வினாக்களின் போது மதுப்பாவனை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள், பதில்கள், குறுக்குக் கேள்விகளை அவதானித்து விட்டே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார். சபாநாயகர் மேலும் கூறுகையில், மதுவை ஒழிப்பதற்கு பாராளுமன்றக் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளன. எனவே சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு விடுமோ என்று சிந்தித்துக் கொண்டிருக்காமல் மதுவை முற்றாக ஒழித்து முற்றுபுள்ளி வைப்பதற்கு இணைந்து நடவடிக்கை எடுப்போம். மதுவிற்கு தற்போது “கமா’ போடப்பட்டுள்ளது. அதற்கு நாம் அனைவரும் இணைந்து முற்றுப்புள்ளி வைப்போம் என்றார். முன்னதாக கேள்விகளை கேட்டிருந்த ஜே.வி.பி.எம்.பியான லக்ஷ்மன் நிபுன ஆராச்சி, அரசு மதுஒழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்த போதிலும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். (Read more . .)

கஞ்சிகுடிச்சாறு காட்டில் கண்ணிவெடி தாக்குதல்; 2 அதிரடிப்படை அதிகாரிகள் பலி

அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் புதன்கிழமை காலை இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் கொல்லப்பட்டும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு பிரதான படைமுகாமுக்குச் சமீப மாகவே இந்தக் கண்ணிவெடித் தாக்குதல் நடைபெற்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதன்போது அதிரடிப்படை அதிகாரிகள் பயணம் செய்த வாகனம் கண்ணிவெடியில் சிக்கியபோதே இரு அதிகாரிகள் கொல்லப்பட்டும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதேநேரம், கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் அம்பாறை மல்வத்தை மல்லிகைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Next Page »